உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான **ஹோர்முஸ் நீரிணையை “புதிய அமெரிக்க பிரதேசம்” (NEW US Territory)** எனக் குறிப்பிடும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது Truth Social தளத்தில் இன்று (18) வெளியிட்டுள்ளார்.ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்க இறையாண்மையை நிலைநாட்டுவது தொடர்பாக அண்மையில் டிரம்ப் வெளியிட்டு வந்த கருத்துகளின் தொடர்ச்சியாக இந்த பதிவு வெளியாகியுள்ளது.கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, ஈரான் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்தை பெருமளவில் முடக்கியுள்ளது.போருக்கு முன்னர் உலகின் எண்ணெய் போக்குவரத்தில் சுமார் ஐந்தில் ஒரு பகுதி இந்த நீரிணை வழியாக இடம்பெற்றதால், தற்போதைய நிலைமை சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. “அமெரிக்க பிரதேசமாக அறிவிப்பேன்” – டிரம்ப் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பான கருத்தை டிரம்ப் முதன்முதலில் கடந்த வெள்ளிக்கிழமை முன்வைத்திருந்தார்.விரைவில் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பிரதேசமாக அறிவிக்கப்போவதாக அவர் கூறியிருந்தார்.இதற்கு பதிலளித்த ஈரான், **ஹோர்முஸ் நீரிணை “ஈரானுடையதாகவே இருக்கும்”** என தெரிவித்திருந்தது.
திங்கட்கிழமை வெள்ளை மாளிகையின் Oval Office-இல் செய்தியாளர்களிடம் பேசியபோதும் டிரம்ப் இந்த யோசனையை மீண்டும் முன்வைத்து, அது சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், தற்போது ஹோர்முஸ் நீரிணையை “NEW US Territory” எனக் குறிப்பிடும் வரைபடத்தையும் அவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வெளிநாட்டு பிரதேசங்கள் குறித்து டிரம்பின் முந்தைய கருத்துகள்
வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் பிற நாடுகள் அல்லது பிரதேசங்களை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பான கருத்துகளை டிரம்ப் முன்வைப்பது இது முதல் முறையல்ல.2025ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர், **கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாற்றுவது, கிரீன்லாந்தை கைப்பற்றுவது மற்றும் காஸா பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது** போன்ற கருத்துகளையும் அவர் முன்வைத்திருந்தார்.எனினும், அவை எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
நீரிணையை திறக்க ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகள்
ஈரான் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக திறந்திருந்தது.தற்போது நீரிணையை மீண்டும் முழுமையாக திறப்பதற்கு அமெரிக்கா பல நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மீதான தடையை முடிவுக்குக் கொண்டுவருதல், எண்ணெய் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், முடக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துக்களை விடுவித்தல் மற்றும் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் அடங்குகின்றன.இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறக்கப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஈரான் தொடர்ந்தும் உள்ளது.
