சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரை மாதம்பே காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் இன்று (21) கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 216,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக மாதம்பே காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.கல்பிட்டி, நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.காவல்துறைக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மரக்கறி ஏற்றிச் சென்ற பல வாகனங்களை மறித்துச் சோதனை செய்த போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளின்படி, இந்தப் போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.நாட்டில் நிலவும் போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாக, போதைக்காகப் பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளில் ஒன்று சுமார் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
