கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இரண்டு தனியார் பேருந்துகள், கினிகத்தேனை – பேரகொல்ல பகுதியில் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்டபோது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சாரதிகள் கவனக்குறைவாகவும் அபாயகரமான முறையிலும் பேருந்துகளை முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.விபத்தில் பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், இரண்டு பேருந்துகளும் சேதமடைந்துள்ளன.விபத்துடன் தொடர்புடைய இரண்டு பேருந்துகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், சாரதிகள் இருவரையும் நாளை (17) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.அதிவேகமாக வாகனம் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாகவும் அபாயகரமாகவும் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் இடைக்கிடையே பெய்துவரும் கடும் மழை காரணமாக வீதிகள் வழுக்கும் நிலையில் காணப்படுகின்றன. இது தொடர்பாக வழங்கப்பட்ட எச்சரிக்கைகளையும் குறித்த சாரதிகள் பொருட்படுத்தவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடும் மழையால் மண்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளதால், அப்பகுதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வேகத்தைக் குறைத்து மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
## Short Description
