சர்வதேச கடல் எல்லை சட்டங்களை மீறி, ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கப்பல்களுக்கு ஈரான் 2 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 60 கோடி இலங்கை ரூபாய்) வரை கட்டணம் வசூலிப்பதாக ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.ஈரானிய நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலத்தின்படி, ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் நாடுகள் பாதுகாப்பு மற்றும் வழித்தடத்தைப் பயன்படுத்துவதற்காக ‘பாதுகாப்பு வரி’ (Security Tax) செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.குறைந்தது ஒரு கப்பல் நிறுவனம் தனது கப்பலின் பாதுகாப்பான பயணத்திற்காக ஈரானுக்கு 2 மில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளதாக ‘Financial Times’ உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரானின் ராடார் கட்டமைப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில், கப்பல்களைக் கடற்கரைக்கு நெருக்கமாக வரச்செய்து ஈரானிய கடற்படையினர் அவற்றை நேரடியாகச் சோதனையிட்ட பின்னரே அனுமதிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளின் கப்பல்கள் ஈரானின் ‘பாதுகாப்பான வழித்தடத்தை’ (Safe Corridor) பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும், அதேவேளை மேற்கத்திய நாடுகளின் கப்பல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் கடல்சார் சட்டத்தின் (UNCLOS) படி, சர்வதேச நீரிணைகளில் எந்தவொரு நாடும் ஒருதலைப்பட்சமாக வரி அல்லது கட்டணம் வசூலிக்க முடியாது. ஈரானின் இந்த நடவடிக்கை சர்வதேச வர்த்தக விதிகளுக்குப் புறம்பானது எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
