முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட முள்ளியவளை பகுதியில், பொது சுகாதார பரிசோதகர்களின் அதிரடி நடவடிக்கையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல உணவகம் ஒன்று சீல் வைக்கப்பட்டது.முள்ளியவளை சந்தைக்கு அருகில் அமைந்துள்ள குறித்த உணவகம் சுகாதார விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவனால் நேற்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறித்த உணவகத்திற்கு இருபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்ததுடன், உணவகத்தை சீல் செய்வதற்கும் அனுமதி வழங்கியது.அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தண்ணீரூற்று பொது சுகாதார பரிசோதகர் கஜலவன் மற்றும் முல்லைத்தீவு பொது சுகாதார பரிசோதகர் பிரவீன் ஆகியோர் நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த உணவகத்தை நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (03) சீல் வைத்தனர்.பொது சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக எதிர்காலத்திலும் திடீர் சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
