யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தலைமையிலான குழுவினர் நேற்றைய தினம் சம்பவ இடத்திற்குச் சென்று களநிலவரங்களை ஆராய்ந்துள்ளனர்.இதன்போது காவல்துறையினரிடமும் தகவல்கள் கோரப்பட்டுள்ளன.அத்துடன், குறித்த வாகனத்தில் பயணித்த ஏனைய இருவரிடமும், உயிரிழந்த நபரின் உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.முன்னதாக, நேற்று அதிகாலை கட்டளையை மீறிப் பயணித்த சிற்றூர்தியின் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில், குறித்த சிற்றூர்தியின் சாரதியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை, யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் காவல்துறையின் கட்டளையை மீறிப் பயணித்த சிற்றூர்ந்து மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டமை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இதனைக் கூறியுள்ளார்.அதற்கமைய யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினரும், ஊர்காவற்துறை காவல்துறையினரும் இணைந்து இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
