சட்டத்தரணி மீது அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது

1 day ago

யாழ்ப்பாணம் சட்டத்தரணிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் அவர் எழுதிய காணி உறுதி தொடர்பில் தவறான செய்தியை இணையம் ஒன்றில் வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.


முறைப்பாட்டாளரான சட்டத்தரணி சார்பில் யாழ்ப்பாணம் மற்றும் மல்லாகம் சட்டத்தரணிகள் இன்று மன்றில் முன்னிலையாகவுள்ளனர்.


சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் பொய்யான உறுதிகளை நிறைவேற்றுவதாக அவரது படத்துடன் இணையம் ஒன்றில் செய்தி பதிவிடப்பட்டது. தன்மீதான அவதூறு தொடர்பில் சட்டத்தரணி சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.


முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், இணைய பதிவை வெளியிட்ட நபரை பொலிஸ் நிலையத்து அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். எனினும் அவரிடம் பதிவை வெளியிட்டமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாததால் கைது செய்யப்பட்டார்.


சந்தேக நபர் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் கூறினர்.