மன்னாரில் சகோதரர்கள் கொலைக்கு பழிதீர்க்கும் சம்பங்கள் - கைது செய்த மூவருக்கும் நாளைவரை பொலிஸ் காவல்
மன்னார் மாவட்ட நீதிமன்றுக்கு முன்பாக இடம்பெற்ற சுட்டுக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் என மூன்று பேரையும் நாளைவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க மன்னார் நீதிவான் அனுமதியளித்து கட்டளையிட்டார்.
2022ஆம் ஆண்டு இடம்பெற்ற இருதரப்பு முறுகலில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரின் சகோதரரினால் கூலிக்கு அமர்த்தப்பட்டு கொலை செய்ததாக மூவரும் வாக்குமூலமளித்துள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.20 மணியளவில் மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்புள்ள கோட்டை வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
2022ஆம் ஆண்டு உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த இருவர் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மன்னார் நீதிவான் நீதிமன்ற சுருக்கமுறையற்ற விசாரணைக்கு முன்னிலையாக நீதிமன்றுக்கு வருகை தந்த போதே அவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி்ச் சூடு நடத்திவிட்டு தப்பித்தனர்.
சம்பவத்தில் நொச்சிக்குளத்தை சேர்ந்த இருவர் உயிரழந்தனர். பெண் உள்பட இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. பேசாலையில் வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று நேற்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றய நபர் உள்பட இருவர் நேற்று தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு அடம்பனில் வைத்து ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர். அந்தக் கொலையும் நீதிமன்றுக்கு முன்பான கொலையும் சகோதரர்களின் கொலைக்கு பழிதீர்க்கும் சம்பவம் என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் மன்னார் நீதிவான் மன்றில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர். பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் விண்ணப்பம் செய்தஈனர். அதனை ஆராய்ந்த நீதிவான், நாளை வரை மூவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து கட்டளை வழங்கினார்.