யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு பேரணி


சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பித்த பேரணி, யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன் நிறைவடைந்தது.
இலங்கையின் சுதந்திர தினம் தமிழர் தேசத்தின் கரி நாளாக பிரகடனப்படுத்தி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏழு முக்கிய விடயங்களை வலியுறுத்தி இன்று (04) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நீதி வேண்டும்', 'தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை தேவை', 'தமிழ் அரசியல் கைதிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படுதல் வேண்டும்', 'பயங்கரவாதத் தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்', 'தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்', 'தமிழர் தாயகத்திலுள்ள வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளை அழிக்காதே', 'இறைமை, சுயநிர்ணயம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டித் தீர்வு வேண்டும்' உள்ளிட்ட ஏழு விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டன.
நல்லாட்சி அரசு என்ற பெயரிலான மைத்திரி - ரணில் அரசாங்கம், தமிழ் தரப்புடன் இணைந்து தயாரித்த புதிய ஏக்கியராஜ்ஜிய (ஒற்றையாட்சி) அரசியலமைப்பு வரைபை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முற்றாக நிராகரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி, தமிழ் இன அழிப்புக்கான நீதி, நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படுதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தும் பதாதைகளை தாங்கியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களை புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.