மன்னார் சுட்டுக்கொலைகள்; குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்க சந்தேக நபர்கள் மூவரும் முன்வந்ததால் நாளைவரை கட்டுக்காவல்

மன்னார் மாவட்ட நீதிமன்றுக்கு முன்பாக இடம்பெற்ற சுட்டுக்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் ஒருவரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் என மூன்று பேரும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிவான் முன்னிலையில் வழங்க முன்வந்துள்ளனர்.
அதனால் சந்தேக நபர்கள் மூவரையும் நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.20 மணியளவில் மன்னார் நீதிமன்ற வளாகத்துக்கு முன்புள்ள கோட்டை வீதியில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
2022ஆம் ஆண்டு உயிலங்குளம் - நொச்சிக்குளம் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் சகோதரர்கள் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். அதே குடும்பத்தை சேர்ந்த இருவர் உள்பட பலர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மன்னார் நீதிவான் நீதிமன்ற சுருக்கமுறையற்ற விசாரணைக்கு முன்னிலையாக நீதிமன்றுக்கு வருகை தந்த போதே அவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி்ச் சூடு நடத்திவிட்டு தப்பித்தனர்.
சம்பவத்தில் நொச்சிக்குளத்தை சேர்ந்த இருவர் உயிரழந்தனர். பெண் உள்பட இருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன. பேசாலையில் வைத்து இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று நேற்றுமுன்தினம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய நபர் உள்பட இருவர் நேற்றுமுன்தினம் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு அடம்பனில் வைத்து ஒருவரை சுட்டுக்கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையவர். அந்தக் கொலையும் நீதிமன்றுக்கு முன்பான கொலையும் சகோதரர்களின் கொலைக்கு பழிதீர்க்கும் சம்பவங்கள் என கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலமளித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் மன்னார் நீதிவான் மன்றில் நேற்று மாலை முற்படுத்தப்பட்டனர். பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். அதனை ஆராய்ந்த நீதிவான், இன்று வரை மூவரையும் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து கட்டளை வழங்கினார்.
இந்த நிலையில் மூவரும் இன்று மாலை மன்னார் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் மூவரும் நீதிவான் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்க மன்றிடம் வேண்டுதல் வைத்தனர்.
அதனால் பொலிஸ் தடுப்பு கட்டளையை நீடிக்காது சந்தேக நபர்கள் மூவரையும் நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் முன்வைக்க உத்தரவிட்ட நீதிவான், நாளை குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவதற்கு அனுமதியளித்தார்.