தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசாக்களை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை வரவேற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இது குறித்த சில முக்கிய அவதானிப்புகளையும் முன்வைத்துள்ளார்.பல தசாப்தங்களாக முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான அந்தஸ்து மற்றும் கண்ணியமான வாழ்வைப் பெற்றுக்கொடுக்க இக்கோரிக்கை ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.எனினும், கடந்த காலங்களைப் போலவே தேர்தல் காலங்களில் இத்தகைய கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், இக்கோரிக்கை தேர்தல் நோக்கங்களுக்காக அன்றி, தூய மனிதாபிமான அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தமிழக முகாம்களில் இருந்த இலங்கையர்கள் சுயமாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் திரும்புவதற்குத் தங்களது அரசாங்கம் தொடர்ச்சியாக வழிவகை செய்ததாக அவர் நினைவு கூர்ந்தார்.சவாலான சூழலிலும் அவர்கள் தாயகத்தில் கௌரவமாக வாழ்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.தற்போது தமிழக முகாம்களில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகத் தகவல்கள் வருவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, இது கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.இலங்கை அரசு இது குறித்து ஆராய்ந்து, நாடு திரும்ப விரும்புவோருக்குத் தடையின்றி வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.”இலங்கையர்கள் இந்தியாவில் எதிலிகள் முகாம்களில் தொடர்ந்து கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இலங்கைக்குத் திரும்பி உரிமையுள்ள பிரஜைகளாக வாழ முடியும்.”இந்த 89,000 இலங்கையர்களும் எமது நாட்டு மக்கள் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கை மற்றும் இந்திய மத்திய அரசுகளும், தமிழக அரசும் இந்த உணர்வுப்பூர்வமான மனிதாபிமான விவகாரத்தை அரசியலாக்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நிரந்தரத் தீர்வை நோக்கி இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
