இலங்கையில் இணைய வழி நிதி மோசடிகளை முன்னெடுப்பதற்காக வருகை தந்த 09 சீனப் பிரஜைகள், சுமார் 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான இலத்திரனியல் தொடர்பாடல் சாதனங்களுடன் இன்று வியாழக்கிழமை (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை சைனா ஈஸ்டர்ன் விமான சேவையின் MU-6912, எயார் சீனாவின் CA-425 மற்றும் எயார் ஏசியாவின் FD-047 ஆகிய விமானங்கள் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் போது, அவர்கள் தங்களது உடலிலும் ஆடைகளுக்குள்ளும் செலோடெப் மூலம் ஒட்டி மறைத்து வைத்திருந்த 383 பயன்படுத்தப்பட்ட கைத்தொலைபேசிகள், 101 டெப் கணினிகள் மற்றும் 06 வைஃபை ரவுட்டர்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டன.கைது செய்யப்பட்ட சீனப் பிரஜைகளைத் தடுப்புக் காவலில் வைத்துள்ள கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
