தடைகள் - நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தே தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகின்றோம் - வரதராஜன் பார்த்திபன் ஆதங்கம்
பல தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டியே நாங்கள் எமது பரப்புரை பணிகளை முன்னெடுத்து செல்வதாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியில் மான் சின்னத்தில் போட்டியிடும் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர் பகுதியில் தேர்தல் பரப்புரை நடவடிக்கைளை தமிழ் மக்கள் கூட்டணியினர் மேற்கொண்ட போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வரதராஜா பார்த்திபன் மேலும் தெரிவித்ததாவது;
எங்களின் பரப்புரை நடவடிக்கைகளை முடக்குவதற்கு பல்வேறுபட்ட சதித்திட்டங்களை அரசு தரப்பினரும் , அவர்களுடன் இணைந்து செயற்படும் தரப்பினர்களாலும் மேற்கொள்ளப்படுகிறது.
பருத்தித்துறையில் நான் பரப்புரையில் இல்லாத போது எமது ஆதரவாளர்களை மிரட்டி எனக்கு தொலைபேசி அழைப்பு எடுக்க வைத்து , என்னை அங்கு அழைத்தே கைது செய்தனர்.
தடைகளையும் நெருக்கடிகளையும் தாண்டிதான் நாங்கள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் - அந்த மாற்றத்தை இளையோரான நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் - என்றார்.