அதிர்ஷ்ட லாபச் சீட்டில் பரிசில் வென்ற பணத்தைப் பெற்றுக்கொண்டு உந்துருளியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபர் ஒருவர், ஹொரணை – பொகுணுவிட்ட பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.பத்து இலட்சம் ரூபாய் பணப் பரிசை வென்றதையடுத்து, அதற்கான காசோலையைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் தனது நண்பருடன் கொழும்புக்குச் சென்றுள்ளார்.பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஹொரண நோக்கி உந்துருளியில் சென்று கொண்டிருந்தபோது, பொகுணுவிட்ட பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.உந்துருளியை செலுத்திய நண்பருக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக, குறித்த உந்துருளி வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதகு ஒன்றில் மோதியுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த விபத்தில் உந்துருளியில் பின்னால் அமர்ந்து பயணித்த நபர் உயிரிழந்ததுடன், உந்துருளியை செலுத்தியவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சண்முகம் ஆனந்தன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார். இவர் கடந்த மூன்று வருடங்களாக கிரிஎல்ல பகுதியில் உள்ள ரஜமகா விகாரையில் தங்கியிருந்து அன்னதானம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.ஆனந்தனுக்கு சிங்கள மொழியில் எழுதத் தெரியாத காரணத்தினால், பரிசுத் தொகையைத் தனது நண்பரின் பெயரிலேயே அவர் பெற்றுள்ளார். அந்தப் பணத்துடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிய போதே இந்த மரணம் சம்பவித்துள்ளது.ஹொரண திடீர் மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன மேற்கொண்ட விசாரணைகளின்படி, மதகில் மோதியதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் மற்றும் உடலின் உட்புற உறுப்புகள் சேதமடைந்தமையே மரணத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
