ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி மற்றும் புர்கினா ஃபஸோ உள்பட 20க்கும் அதிகமான நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார்.இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக , மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்களது நாடுகளுக்குள் அமெரிக்கர்கள் நுழைய அனுமதி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இவ்விடயம் குறித்து, மாலியின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பரஸ்பர கொள்கைகளின் அடிப்படையில் மாலி குடிமக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள அதே தடைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அமெரிக்கக் குடிமக்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், புர்கினா ஃபஸோவின் வெளிவிவகார அமைச்சர் கராமகோ ஜீன் – மேரி தரோரே கையெழுத்திட்ட அறிக்கையில், அமெரிக்கக் குடிமக்கள் மீது பயணத் தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
